தொடர்ந்து போக்கு காட்டும் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. ரூட்டை மாற்றிய அமலாக்கத்துறை ; புதிய சொகுசு வீட்டில் வைத்த செக்!!

Author: Babu Lakshmanan
9 August 2023, 4:17 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் மாற்றுவழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், தற்போது அவரை 5 நாட்களில் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர் கொடுக்கும் வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து 4 முறை அவரது சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஒருமுறை கூட அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் சொகுசு பங்களாவின் முன் பகுதியில் இது தொடர்பான நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது. இது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 269

0

0