கேக்கறவன் கேனயனா இருந்தா… பெருந்துறை தொழிலதிபரிடம் ஒப்பந்தம் போட ஸ்பெயினுக்கு போகணுமா? இபிஎஸ் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 9:21 am
EPS
Quick Share

கேக்கறவன் கேனயனா இருந்தா… பெருந்துறை தொழிலதிபரிடம் ஒப்பந்தம் போட ஸ்பெயினுக்கு போகணுமா? இபிஎஸ் கேள்வி!

எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டத்தை புரட்சி தலைவர் கொண்டு வந்தார். தான் பட்ட துன்பங்களை மற்றவர்கள் படக்கூடாது என்று நினைத்தவர்தான் நம் புரட்சி தலைவர்.

சேலம் மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை. போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆட்சி போய்விடும் என்ற பயத்தால் தான் பணிகள் முடிவதற்கு முன், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வர்தா, நிவர் என பல புயல்களை சந்தித்தோம், 6 லட்சம் மரங்கள் புயலால் சாய்ந்தன. அப்போது புயல் வேகத்தில் அதை சரி செய்தோம். மிக்ஜாம்’ புயலின்போது 3 நாட்களுக்கு மக்களுக்கு உணவு கூட கொடுக்க இவர்களால் முடியவில்லை.

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்காததால், தென் மாவட்டங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவு, மருத்துவம் கிடைக்காமல் துன்பப்பட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகங்களை மூடி வருகிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதை தடுக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கம் தான்.

சமீபத்தில் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது போடாத புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்போது எதற்கு ஸ்பெயின் நாட்டுக்கு சென்று போட வேண்டும். அதுவும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தொழிலதிபரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட எதுக்கு ஸ்பெயின் செல்ல வேண்டும். கேக்கறவன் கேனயனா இருந்தால், எறும்ஹப ஏரோப்ளேன் ஓட்டுமாம் என பழமொழியை கூறினார்.

Views: - 245

0

0