ஓபிஎஸ் எல்லாம் ஒரு தலைவரா…? ரொம்ப கேவலம்… அதிமுகவினர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 5:54 pm
Quick Share

சென்னை : அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுக்காததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையின் போது காயமடைந்த அதிமுக தொண்டர்களை, அரசு மருத்தவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக தகவல் வந்த உடன் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓ.பன்னீர்செல்வம் தாக்கியது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வில் உயர்ந்த பதவியை வகித்த ஓ.பன்னீர் செல்வம் செய்தது மிகப்பெரிய துரோகம் .காவல்துறையினர் ரவுடிகளுடன் சேர்ந்து கட்சியினரை தாக்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர்.

எந்த ஒரு தலைவராவது தனது கட்சியினரை தாக்குவார்களா? ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளராக ஆக்கியதற்கு அவர் தகுந்த வெகுமதியை தந்துள்ளார். அடிபட்ட நிர்வாகிகள் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி தந்தது; அவர்களை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார் அவர். ஓபிஎஸ் ஒரு தலைவரா..? கேவலம், எனக் கூறினார்.

Views: - 374

0

0