கூட்டணி கட்சி தலைவர் கைது… இது திமுகவின் திட்டமிட்ட சதி ; இபிஎஸ் கொந்தளிப்பு…!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 4:12 pm
Quick Share

மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் உடனடியாக விடுதலை செய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ் நாட்டில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகவும், இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கடந்த 10.3.2024 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அவர்களிடமும் புகார் மனு அளித்திருக்கிறார்.

மேலும், 10.3.2024 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதிநாராயணன் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது தமிழக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தியும் பேட்டி அளித்துள்ளார். போதை வியாபாரிகள் மீது தமிழக காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 14.3.2024 அன்று காலை 11 மணியளவில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் அவர்களுடைய வாகனத்தை சேதப்படுத்தியும், வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

போதை வியாபாரிகள் குறித்து தகவல் கொடுத்த புகாரின் மீது ஆளும் விடியா திமுக அரசின் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் அவர்களையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்திற்காகவும், அவருடைய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை முடக்கும் விதமாகவும் அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்து, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ள விடியா திமுக அரசின் காவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

EPS

கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்களையும், மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்யவும், தற்போது சிறையில் உள்ள ஆதிநாராயணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 97

0

0