இது அவங்க வாழ்வாதாரம்… மாற்று இடம் வழங்கும் வரை காலஅவகாசம் கொடுங்க ; பழனி அடிவார வியாபாரிகளுக்காக இபிஎஸ் வாய்ஸ்!!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 9:21 am
Quick Share

பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை மாற்று இடம் வழங்காமல் அகற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகள் மலையடிவாரம், பேருந்து நிலையம் அருகில் மற்றும் ரயில் நிலைய சாலையில் உள்ளன. இந்த கடைகள் பல்வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. தற்போது தேவஸ்தானத்திற்கு கடைகள் உள்ள இடம் தேவைப்படுவதால் காலி செய்யக்கோரி வாடகைதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

காலி செய்ய மறுத்து கடைக்காரர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் கடைகளை பூட்டி சீல் வைத்தது. மேலும் பேருந்து நிலையம் அருகே இருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை மாற்று இடம் வழங்காமல் அகற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கான கடைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், எனவே தாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய வியாபாரிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவ்வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 111

0

0