அறிவித்த நிவாரணம் போதாது… இளம் அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்குக : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
6 April 2023, 3:39 pm
Quick Share

சென்னை : குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளம் அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சென்னை நங்கநல்லூரில் இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசியதை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதாவது :- மாண்புமிகு பேரவைத்தலைவர்‌ அவர்களே, நேற்று (56.4.2023) பங்குனி உத்திரத்தை தமிழ்நாடெங்கும்‌ முருகன்‌ திருக்கோயில்களில்‌ சிறப்பு பூஜைகள்‌, தேரோட்டம்‌ மற்றும்‌ தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. சென்னை நங்கநல்லூரில்‌ வரலாற்று பெருமை வாய்ந்த அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர்‌ திருக்கோயிலிலும்‌ பங்குனி உத்திர திருவிழா காலை முதலே சிறப்பாக நடைபெற்றது. அதில்‌ ஒரு நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நிகழ்ச்சி அக்கோயிலில்‌ இருந்து 500 மீட்டர்‌ தூரமுள்ள மூவரசம்பட்டு என்ற இடத்தில் உள்ள குளத்தில்‌ நடைபெறுவது வழக்கம்‌. அக்குளம்‌ 20 அடி ஆழம்‌ கொண்டது. ஓரளவு தண்ணீர்‌ உள்ளது. குளத்தின்‌ அடிப்பகுதியில்‌ சேரும்‌, சகதியும்‌ உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கம்‌ போல்‌ நேற்று காலை 9.30 மணியளவில்‌ சுமார்‌ 20 அர்ச்சகர்கள்‌ சாமி சிலைகளை பல்லக்கில்‌ தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக அக்குளத்திற்கு அர்ச்சகர்கள்‌ எடுத்து வந்தனர்‌.அக்குளத்தில்‌ அர்ச்சகர்கள்‌ இறங்கி சாமி சிலைகளை தண்ணீரில்‌ நீராட முயன்ற போது, ஒரு அர்ச்சகர்‌ கால்‌ வழுக்கி தவறி குளத்தில்‌ உள்ள தண்ணீரில்‌ விழுந்தார்‌. அவருக்கு நீச்சல்‌ தெரியாததால்‌ தண்ணீரில்‌ மூழ்கத்‌
தொடங்கியதை பார்த்த மற்ற அர்ச்சகர்கள்‌ ஒருவர்‌ பின்‌ ஒருவராக அவரை காப்பாற்ற முயன்றனர்‌.

ஆனால்‌ காப்பாற்ற முயன்றவர்களும்‌ ஒருவர்பின்‌ ஒருவராக குளத்தில்‌ மூழ்கத்‌ தொடங்கியதைத்‌ தொடர்ந்து, அங்கு இருந்த மற்றவர்கள்‌ அருகில்‌ இருந்த நீச்சல்‌ தெரிந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்‌. ஆனால்‌ அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. நீரில்‌ மூழ்கிய ஐவரும்‌ இறந்துவிட்டனர்‌.

அதைத்‌ தொடர்ந்து தீயணைப்பு மற்றும்‌ மிட்புத்‌ துறை அழைக்கப்பட்டு அவர்கள்‌ மீட்பு பணியில்‌ ஈடுபட்டனர்‌. இறுதியாக இறந்தவர்களின்‌ உடல்கள்‌ மீட்கப்பட்டன.

  1. சூர்யா, நங்கநல்லூர்‌.
  2. ராகவ்‌, மடிப்பாக்கம்‌
  3. யோகேஷ்வரன்‌, கீழ்கட்டளை.
  4. ராகவ்‌, நங்கநல்லூர்‌.
  5. பானேஷ்‌, நங்கநல்லூர்‌.

மேற்கண்ட ஐந்து நபர்களும்‌ 24 வயதிற்கு உட்பட்டவர்கள்‌ என்று தெரிய வருகிறது. திருக்கோயில்களுக்கு சொந்தமான குளங்களையும்‌, திருக்கோயில்‌ நிகழ்ச்சிகள்‌ நடைபெறும்‌ குளங்களையும்‌ தூர்வாரும்‌ பணிகளை உடனடியாக இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்‌. மேலும்‌ இளம்‌ வயதிலே இறந்த ஐவருக்கும்‌ அரசு அறிவித்த நிவாரணம்‌ போதாது. நிவாரனத்‌ தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌.

இதுபோலவே விழுப்புரம்‌ மாவட்டம்‌, மயிலம்‌ அருள்மிகு முருகர்‌ திருக்கோயிலில்‌ நாராயணன்‌ என்ற 45 வயதுள்ள பக்தர்‌ ஒருவர்‌ அங்குள்ள குளத்தில்‌ குளித்தபோது குளத்தில்‌ மூழ்கி இறந்துள்ளார்‌ என்று செய்திகள்‌ வந்துள்ளன. இவருக்கும்‌ அரசு தகுந்த நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்று வற்புறுத்துகிறேன்‌. ஆபத்தில்‌ உயிரிழந்தவர்களை இழந்து வாடும்‌, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களையும்‌, வருத்தத்தையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 271

0

0