சேலம் அரசு மருத்துவமனையில் என்ன நடந்துச்சு…? திடீர் தீவிபத்துக்கு காரணம் என்ன…? தமிழக அரசை கேள்வி கேட்கும் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 9:03 pm
Quick Share

சேலம் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீவிபத்து குறித்து உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், முதல் மாடியில் இருந்து நோயாளிகள் அவரச அவசரமாக வெளியேற்றினர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட புகை காரணமாகவும், மின் கசிவு காரணமாகவும் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தினால் நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த தீவிபத்து குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நோயாளியின் உயிரிழப்பு குறித்து முழு விசாரணை நடத்தி உண்மை நிலையை விளக்க வேண்டியது அரசின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர நோயாளிகள் வருகை தரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று காலை, தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் ஒரு நோயாளி உயிரிழந்தது அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது இறப்பு குறித்து முழு விசாரணை நடத்தி உண்மை நிலையை விளக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இனியாவது, விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் உடனடியாக ஆய்வு செய்து சீர்செய்ய வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 235

0

0