வாஜ்பாய், அத்வானிய விட நீங்க பெருசா…? 1998ல் நடந்தது பாஜகவுக்கு மறந்து போச்சா..? அரசியல் அனுபவமில்லாத அண்ணாமலை… இபிஎஸ் ஆவேசம்..!!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 3:55 pm
Quick Share

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பொதுவெளியில் எவ்விதமான அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் வெளியாகும் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் 1991-96 ஊழல் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் முதலிடம் என்று சொல்வேன்” என கூறியிருந்தார்.

அண்ணாமலை பதிலளித்த 1991-96 காலகட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும், அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, “பாஜக மாநிலத்தலைவராக இருப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணாமலையின் விமர்சனப்போக்கு தொடர்ந்தால் அதிமுக-பாஜக கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும்” என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த பாஜகவின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், “அண்ணாமலை ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியை ஒழுங்காக படிக்காமல் ஜெயக்குமார் பிதற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான். பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. 19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தை செடி என்று சொல்வதா?” என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று அதிமுக, பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது ;- ஒன்றரை கோடி தொண்டர்களுடைய மனதிலும், பொதுமக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வாழும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுவெளியில் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.

திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாக கொடுத்துள்ளார். இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகப்பெரிய வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவில் மூத்த தலைவர்களாகிய வாஜ்பாய், அத்வானி மற்றும் தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பிற மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் முன்னாள் முதலமைச்சர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். தேசிய தலைவருக்கு நிகராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி இருக்கிறார்.

தற்போது தேசிய கட்சியான பாஜக, மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூல காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து அறிமுகப்படுத்தினார். 1998இல் முதன் முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமையப்பெற, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரும்பான்மையான கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்க செய்ததோடு, பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதற்கு அரும்பாடுபட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 16 ஆண்டுகள் பதவியில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டவர். இத்தகைய போற்றக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பொதுவெளியில் எவ்விதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் என தெரிவித்தார்.

Views: - 264

0

0