மின்கட்டண உயர்வால் திமுக மீது மக்களுக்கு கோபம்… திசைதிருப்பும் நாடகம்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : இபிஎஸ் விளாசல்…!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 12:08 pm
Quick Share

மின்கட்டண உயர்வை திசைதிருப்புவதற்காகவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நடத்தி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் 500 கோடி ஊழல் என்ற புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு குழு இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 358

0

0