இது ஆரம்பம் தான்… அடுத்தடுத்து சிறைக்கு செல்லப் போகும் திமுக அமைச்சர்கள் ; 2 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் மட்டும் தான் ; இபிஎஸ் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
21 December 2023, 5:48 pm
Quick Share

தமிழக அரசு வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதால் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழக அரசு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த நிலையில், திமுக அரசு அனைத்து துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இதனால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதன் பின்னரும், தென்மாவட்ட மழை குறித்து கூடுதல் கவனம் செலுத்த தவறியதால் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மழை நீர் செல்லும் கால்வாய்கள், ஆறுகள், 80 சதவீதம் தூர் வாரி ஆழப்படுத்தப்பட்டு இராட்சத மோட்டார்கள் மூலமாக உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டது.

மேலும் முன்கூட்டியே பொதுமக்களுக்கு உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் வாங்கி இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. அம்மா உணவகம் மூலமாக உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நிவாரண நிதி வழங்கி, மீட்பு பணிகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் ஆங்காங்கே நிலுவையில் தான் உள்ளது. எந்த திட்டமும் இன்னும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

திட்டங்கள் செயல்படுத்தும் இடங்களில் திமுகவின் கவுன்சிலர்கள் உட்பட பலரின் தடைகளை தாண்ட வேண்டிய நிலையில் தான் திட்டங்கள் உள்ளன. தமிழக அமைச்சர்கள் பலரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழல் வழக்கில் திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள் ; தற்போது 2 பேர், இன்னும் எத்தனை பேர் சிறை செல்லப் போகிறார்கள் என தெரியாது. திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளாக ஊழல்தான் நடக்கிறது.

மக்களின் நலத் திட்டங்கள் மீது முதல்வர் கவனம் செலுத்தி அறிவிக்கின்றன. திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். வெள்ள பாதிப்பிற்கு தேவையான உதவிகள், பாதிப்பிற்கு உரிய நிவாரணம், கொடுத்து மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முனுசாமி, அன்பழகன், சரோஜா, பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Views: - 260

0

0