தாசில்தாரை தாக்கிய வழக்கு… 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தீர்ப்பு… முக அழகிரிக்கு உற்சாக வரவேற்பு…!!!

Author: Babu Lakshmanan
16 February 2024, 12:55 pm
Quick Share

தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து, மதுரை மாவட்ட ஜே. எம். 1 நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மு.க. அழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர், மு.க. அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணணை நடைபெற்றது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜரானார்கள்.

தீர்ப்பில், மு.க. அழகிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முத்துலட்சுமி தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மு.க. அழகிரியை அவரது ஆதரவாளர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Views: - 147

0

0