சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 1:43 pm
Jayakumar
Quick Share

மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சர்.பிட்டி. தியாகராயரின் 173வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ஆர்எஸ் ராஜேஷ், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமுதாயத்தில் மிக மிக பின்தங்கியவர்கள் வாழ்வியல் மேம்பாடு அடைய வேண்டும் என்று சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகிய மூன்று பகுதிகளில் மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தொடங்கப்பட்டது நீதி கட்சி.

மேலும் படிக்க: ஆட்சியில் இருக்கும் போதே ஒன்னும் பண்ணல… இப்ப மட்டும் நடக்கவா போகுது..? திமுக குறித்து இபிஎஸ் விமர்சனம்!!!

நீதி கட்சியினை தோற்றுவித்தது மட்டுமல்லாமல், முதல் தலைவராக இருந்து ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனும் வகையில் நீதி கட்சியின் தலைவர் சர்பிடி தியாகராயர் தங்களது வாழ்வினை முழுவதும் அர்ப்பணித்தார்.

1921 ஆம் ஆண்டு முதல் அரசாணை வெளியிடப்பட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு வரவேண்டும் எனும் வகையில் குரல் கொடுத்தது நீதி கட்சி தான். கழகப் பொதுச்செயலாளர் கே எடப்பாடி அவர்களின் சார்பில் தற்போது அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த 500 கோடி ரூபாய் பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாகும். இந்த சாலைகள் உரிய தரத்தில் போடப்படுவதில்லை. எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சாலைகளள் அமைப்பதற்கு முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பேராசிரியரிடம் ஒரு சான்றிதழ் பெற்றுக் கொண்டு, 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சாலைகள் உரிய ஆய்வுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டனவா..? யாரிடம் சான்றிதழ் பெற்று அமைக்கப்பட்டது..? எத்தனை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது..? என சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் சாலைகளை அமைப்பதற்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.

தற்போது நடக்கிறது ஒரு இடியமின் சர்வாதிகார ஆட்சி, அதிமுக கட்சித் தொண்டர்கள் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கருத்து கூறினால், இரவோடு இரவாக அவர்களை கைது செய்து விடுவார்கள்.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் சட்ட கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கும் மாணவரை கைது செய்து ஒரு மர்மமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் எங்கு இருக்கின்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் இல்லை என்பது மிக கண்டிக்கத்தக்கது. இது குறித்து உண்மையை விளக்க வேண்டியது காவல்துறையின் கடமை.

காவல்துறையினர் எஜமானராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் கூறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டு வருகின்றனர். அவர் செய்யும் செயல்களில் நியாம் முகாந்திரம் இருக்கின்றதா..? என கண்டறியாமல் தனிப்பட்ட நபரை கைது செய்யும் காவல்துறை தற்போது ஏவல் படையினராகவே மாறிவிட்டது.

எங்கள் ஆட்சி மலரும் பொழுது பொய் வழக்கு அளித்த அனைத்து காவல்துறையினரும் தப்பிக்க முடியாது. 2015ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்துக்கு நடைபெற்ற இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்த நிதி ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் கோடி கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை 7000 கோடி மட்டுமே மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கி உள்ளத.

மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பிஜேபி தமிழகத்தை கண்டு கொள்ளாமல், வடமாநிலங்களில் ஏதேனும் இயற்கை பேரிடர்கள் நடந்தால் அவர்களுக்கு வாரி வழங்குகின்றனர். தமிழக மக்களிடம் பெறும் வரி பணம் தமிழக மக்களுக்கு சரிசமமாக வகுத்துக் கொடுங்கள். ஆனால் வடக்கில் ஒரு நீதி, தெற்கில் ஓர் நீதி என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உரிய அரசியலமைப்பு சட்டத்தினை அமல்படுத்தியிருந்தால் மாநிலங்களில் கொடுக்கப்பட்ட வரிப்பணத்திற்கு ஏதுவாக மக்களுக்கு மீண்டும் திரும்பி வந்து இருக்கும். அதை செய்யாமல் மாநில உரிமையை காப்போம் என ஸ்டாலின் சொல்வது கேலி கூத்தாக உள்ளது.

திமுக அரசு தங்களின் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட செயல்களை தவிர்த்து, வேறு எந்த செயல்களும் செய்யவில்லை. தமிழக உரிமையை காக்க வேண்டும் என்பதே எங்களது கோஷம், எனக் கூறினார்.

Views: - 122

0

0

Leave a Reply