அண்ணா மட்டும் இப்ப உயிரோடு இருந்திருந்தால் தற்கொலை பண்ணியிருப்பாரு..? கடம்பூர் ராஜு பரபர பேச்சு!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 11:18 am
Kadambur Raju -Updatenews360
Quick Share

குடும்பம் மற்றும் வாரிசு கட்சியாக மாறியுள்ள திமுகவின் இன்றைய நிலையை பார்த்து அண்ணா உயிரோடு இருந்தால் தூக்கிட்டு அண்ணா தற்கொலை செய்து கொள்வார் என முன்னாள் அமைச்சர் கடம்பூர். ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் அதிமுக சார்பில் 115 வது அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்மா பேரவை அம்பிகை பாலன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது :- அண்ணா தொடங்கிய கட்சியாக திமுக இருந்தாலும் தற்பொழுது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. அண்ணாவின் பெயரை, புகழை மறைத்தவர்கள் திமுகவினர் என்றும், அதிமுகவினர் ஏமாற்றமாட்டார்கள், ஏமாற்றுவதற்கு பிறந்தவர்கள் திமுகவினர்.

மாற்றம் தருவதாக கூறி ஏமாற்றத்தினை கொடுத்துள்ளனர். இதனால், மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர். ஆளுகின்ற பொறுப்பில் இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியாற்றும் இயக்கம் அதிமுக என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து அதிமுக வலியுறுத்திய காரணத்தினால், இன்றைக்கு தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை என்று தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தலைவிக்கு 1000 உரிமைத்தொகை கொடுப்பது வரவேற்க கூடியது தான். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிக்கு ரூ 1500 வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தோம் என்றும், இருந்த போதிலும் மக்கள் ஏமாந்து போய் திமுகவிற்கு வாக்களித்து விட்டனர்

தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை, ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு கொடுத்து விட்டு 1 கோடியே 48 லட்சம் பேருக்கு பட்டை நாமம் போட்ட திட்டம் இந்த உரிமைத்தொகை திட்டம் என்றும், அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல நல்லதிட்டங்களை திமுக நிறுத்தி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினை அரசியலுக்கு கொண்டு வரவில்லை, ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.

திமுக குடும்ப கட்சி, வாரிசு கட்சியாக உள்ளது. அண்ணா உயிரோடு இருந்தால் தற்கொலை செய்து கொண்டு இருப்பார். அண்ணாவின் பெயர் புகழை திமுகவினர் அழித்து விடுவார்கள். பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் போது அதனை திசை திருப்பும் வகையில் சனாதனம் குறித்து உதயநிதி பேசுகிறார்.

இந்து மதத்தில் பின்பற்றக்கூடிய ஒரு கலாச்சாரம் சனாதனம். அதனை நான் உடைப்போன் என்று கூறுகிறார் உதயநிதி ஸ்டாலின். வேறு மதத்தினை பற்றி இது போன்று அவர் சொல்ல முடியுமா ?, நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அப்படி வரவில்லை என்றாலும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் திமுக ஆட்சி வீட்டுக்குபோய் விடும், என்றார்.

Views: - 239

0

0