MGR இல்லைனா ஆ.ராசா ஆடு தான் மேய்த்திருப்பாரு.. காசு வருது.. சீட்டு வருது-னு கம்முனு இருக்கும் திமுக கூட்டணி கட்சிகள் ; செல்லூர் ராஜு விமர்சனம்

Author: Babu Lakshmanan
1 February 2024, 2:47 pm
Quick Share

திமுக அரசை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆளும் திமுக அரசியல் கண்டித்து சொல்லூர் ராஜு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார் .

சென்னை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் தங்களது வீட்டில் பணிபுரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது உடைய பட்டியல் இன சிறுமி மீது வன்கொடுமை செய்து உடல் முழுவதும் சூடு வைத்தும், இரத்த காயங்கள் ஏற்படுத்தியும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்தும் காவல்துறை செயல்படாத வண்ணம் ஏவல் துறையாக மாற்றியுள்ள திமுக அரசையும் கண்டித்தும், மக்கள் பிரச்சனையை வலியுறுத்தியும் கண்டன கோசங்களையும் முழக்கங்களையும் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:- திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகளும் வீட்டில் வேலை பார்த்த 17 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமையை பெண்களுக்காக போராடும் மாதர் சங்கங்கள் ஏன் பேசவில்லை. திருமாவளவன் அறிக்கை விட்டதோடு அதை பற்றி திரும்ப எதுவும் பேசவில்லை.

நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது காலியான சேர்கள் ஒருபுறம், சீட்டாட்டம் ஒரு புறம் என்று நடந்தது. மறைந்த டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் இல்லாவிட்டால் ஆண்டிமுத்து ராஜா ஆடு மேய்க்க தான் போயிருக்க வேண்டும். அவரைப் பற்றி அவதூறாக பேச அவருக்கு தகுதி இல்லை. பட்டியலின பெண்ணுக்கு நடந்த அநீதி பற்றி பேசாமல் இவ்வாறு பேசுவது என்ன நியாயம்.

முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னால் துபாய்க்கு சுற்றுலா சென்று வந்தார். இப்போது கோர்ட்டை அணிந்து கொண்டு வெளிநாடு பயணம் சென்று விட்டார். கூட்டணி கட்சிகள் எதும் பேசாமல் காசு வருது, சீட்டு வருது, அது போதும் என இருக்கிறார்கள்.

பொங்கல் தொகுப்பாக 2022ல் பாம்பை தவிர பூச்சி பள்ளி விழுந்த பொருட்களையும் மிளகுக்கு பதிலாக பப்பாளி விதையும் கொடுத்தார்கள். இந்த வருடம் பொங்கல் தொகுப்பு கொடுக்காமல் ஏமாற்றலாம் என நினைத்தார்கள். ஆனால், எங்களின் பொதுச்செயலர் கூறியதும் அவர்களே தருவதுபோல் 1000 ரூபாய் கொடுத்தார்கள். இந்த திமுக ஆட்சியில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது. மாவட்ட ஆட்சியர், வி ஏ ஓ, தாசில்தார் போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு தனது தந்தை பெயரை வைத்துள்ளார். ஏன் மாமன்னர் திருமலை நாயக்கர் வைக்கலாம், மதுரைக்கு தண்ணீர் கொடுத்த ஜான் பெண்ணிகுயிக் பெயரை வைக்கலாம், முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தங்களின் தந்தை பெயரை ஏன் வைக்கிறார்கள், இது நிலைக்காது.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை திமுக ஆட்சியில் இருந்தால் தீர்த்து வைத்திருப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து இவ்வளவு காலங்கள் ஆகியும் என்ன செய்தார், எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 239

0

0