விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டுபிடிங்க.. அடுத்த டார்கெட் நீங்களும், CM ஸ்டாலினும்தான் : அதிர்ச்சியை கிளப்பிய அல்போன்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 6:12 pm
Udhaya
Quick Share

விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டுபிடிங்க.. அடுத்த டார்கெட் நீங்களும், CM ஸ்டாலினும்தான் : அதிர்ச்சியை கிளப்பிய அல்போன்ஸ்!

விஜயகாந்த்தை கொன்றவர்களை கண்டறிய வேண்டும் என பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படம் மூலம் பெரிய அளவில் கவனத்தை பெற்றார். இதையடுத்து இவர் கோல்டு என்ற படத்தை இயக்கியிரந்தார். இந்த திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவு தொடர்பாக அதிர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து, நான் உங்களை கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயின்ட் மூவீஸ் அலுவலகத்தில் சந்தித்தபோது, உங்களை அரசியலுக்கு வரும்படி கூறினேன்.

மேலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டறியும்படி கூறினேன். இப்போது விஜயகாந்த்தை கொன்றவர்களையும் நீங்கள் கண்டறிய வேண்டும்.

ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கமல்ஹாசனையும் அவர்கள் கொலை செய்ய முயன்றுள்ளார்கள். இதை அப்படியே விட்டுவிட்டால், அடுத்தது நீங்களும், ஸ்டாலின் சாரும் தான் டார்கெட்டாக இருப்பீர்கள். கொலையாளிகளையும் அவர்களின் நோக்கத்தையும் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயமே” எனத் தெரிவித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்று தான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் குறைந்தபட்சம் ஓடிடியில் வெளிவரும் வகையில் குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.

நான் சினிமாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது,​​​​வாழ்க்கை ‘இன்டர்வல் பஞ்ச்’ போல திருப்பத்தைக் கொடுத்துவிடுகிறது” எனப் பதிவிட்டிருந்தார். அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 337

0

0