வேங்கை வயல் போல மற்றொரு சம்பவம் ; அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் ; தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 6:37 pm
Quick Share

தருமபுரியில் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் அருகே உள்ள அரசு பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில், ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில் அசுத்தம் கலந்து இருந்தது தெரியவந்தது. பின்னர், உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து வருகின்றனர்.

பள்ளி குடிநீர் தொட்டியில் கலந்திருந்தது மனிதக்கழிவா..? அல்லது வேறு ஏதேனும் விலங்குகளின் கழிவா..? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, வேங்கை வயலில் கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசுப் பள்ளியின் குடிநிர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 325

0

0