லியோ பட ஊதிய விவகாரம்… ஆர்கே செல்வமணி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை ; அப்செட்டில் நடன கலைஞர்கள்..!!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 8:29 am
Quick Share

லியோ படத்தில் நடன காட்சியில் பங்கு பெற்றவர்கள் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறி வரும் நிலையில், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : சில கானொலிகளில் “லியோ” திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம். “லியோ” திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட 1,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த “லியோ” திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள “ஆதி ஸ்ரீராம்” ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.

தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 395

0

0