திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவில் லஞ்சம்… அமைச்சர் ராஜகண்ணப்பனை உடனே மாற்றுமாறு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Author: Babu Lakshmanan
23 March 2022, 8:08 pm
Quick Share

திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, போக்குவரத்துத்துறையில் வரலாறு காணாத அளவில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாஜலம் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் கிழக்கு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மூன்றாவது வருடாந்திர கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவருமான முருகன் வெங்கடாஜலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய முருகன் வெங்கடாஜலம் திமுக அரசின் மீது பயங்கர குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். குறிப்பாக, போக்குவரத்துத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குண்டூசியை நகர்த்தி வைப்பதற்குக் கூட பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் நிலைமைக்கு மோட்டார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

rajakannappan - updatenews360

குறிப்பாக, தேர்தல் காலத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை சீரமைக்கப்படும், எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகப்போகிறது. வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் மட்டும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

வருகின்ற மே மாதத்திற்குள் இதனை சீர்படுத்தி எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் ஒவ்வொரு மாவட்டம் தோறும், தெருக்கள் தோறும் பல்வேறு தொடர் போராட்டம் நடத்தப்படும். அடுத்தகட்டமாக, கோட்டையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும். அந்த துறையில் உள்ள ஊழல்வாதிகளை கண்டறிந்து அவர்கள் மீது பதவி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Views: - 1039

0

0