‘இன்ஸ்டாவில் காதல் மழை’…போலி profile காட்டி 100 பெண்களுக்கு ‘கல்தா’: ஏமாந்த பெண்கள் கேடி மன்மதனை விட்டு விடும்படி கெஞ்சிய அவலம்..!!

Author: Rajesh
12 April 2022, 6:09 pm
Quick Share

ஆரணி: இன்ஸ்டாகிராம் கணக்கில் வேறு ஒருவரின் போட்டோவை புரொபைலாக வைத்து 100 பெண்களிடம் காதல் வலை வீசி பணம் பறித்த புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பயாஸ். 24 வயதான இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆரணியை அடுத்த பையூரை சேர்ந்த பாலாஜி என்பவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் வழியாக பல பெண்களிடம் பேசி வந்தது தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து பாலாஜியின் நண்பருக்கு தெரிய வந்ததையடுத்து அவர் பாலாஜியிடம் இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படம் கொண்ட ஒரு கணக்கு இருப்பதை சொன்னார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, பயாஸிடம் பெண் குரலில் பேசி அவரை ஆரணி பேருந்து நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து, பயாஸும் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பயாஸிடம் பாலாஜி, எனது புகைப்படத்தை உங்கள் ஐடியில் தவறாக பயன்படுத்தி வருகிறீர்கள். இதனால் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே அந்த கணக்கை டெலிட் செய்து விடுமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு பயாஸ் மறுத்துவிட்டு பாலாஜியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலாஜி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் பயாஸை கைது செய்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 க்கும் மேற்பட்ட திருமணமான மற்றும் இளம் பெண்களிடம் காதல் வார்த்தைகளை வீசி பண மோசடியிலும் பயாஸ் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த 100 பேரில் 75 சதவீதம் திருமணமானவர்கள் என சொல்லப்படுகிறது. அவர்களிடம் காதல் செய்து ஏமாற்றுவதுதான் பாதுகாப்பு என்பதை பயாஸ் நன்கு அறிந்தே இந்த வேலையை செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பயாஸ் அனுப்பிய இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. 4 பிரிவுகளின் கீழ் பயாஸ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் போளூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், பயாசிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவரிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். மேலும் சில பெண்கள் மெசேஜ் அனுப்பினர். இளம் பெண்களிடம் போலீசார் பயாசுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் ஒரு மோசடி நபர். அவரை நம்பி ஏமாற வேண்டாம். இனிமேல் இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினர்.

செல்போன் ஆய்வு

அப்போது சில பெண்கள் பயாஸ் மிகவும் நல்லவர். அவர் எங்களுக்கு வேண்டும் என கூறியுள்ளனர். இளம் பெண் ஒருவர் பயாஸ் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும், மேலும் சில பெண்கள் பயாசைவிட்டு விடும்படியும் கெஞ்சியுள்ளனர் . போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவருக்கு ஆதரவாக பேசி இளம்பெண்கள் அடம் பிடித்த சம்பவம் போலீசாரை விழிபிதுங்க வைத்துள்ளது.

Views: - 1090

0

0