மகளிருக்கு ரூ.1,000 கொடுக்க முடியாத போது… மாணவிகளுக்கு ரூ.1,000 சாத்தியமா..? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி…!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 1:53 pm
Quick Share

மதுரை : ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு, இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையம் வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரை வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட்டாகும். தமிழக அரசின் கடன் தொகை 6 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது. உள்நாட்டு உற்பத்தி அளவீடு 26% கடன் என்ற அளவில் தமிழகத்தில் தற்போது உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகம் மட்டும் தான் கடந்த ஆண்டு அதிக கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் கடன் சுமையில் 7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக கூறிவருகின்றனர். தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டில் எந்த ஒரு பயனும் இல்லை. அப்படியே இருந்தால் இனி வரும் வருடங்களில் அரசு 80,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். தமிழக மக்களை கடுமையான கடன் சுமையில் தமிழக திமுக அரசு உண்டாக்குகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.?

தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு 1000 ரூபாய் கொடுப்போம். கேஸ் விலையை குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, தற்போது ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, தற்போது அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அதில் எந்த தவறு கிடையாது. ஏற்கனவே குடும்பத் தலைவிக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாயை கூட கொடுக்க முடியவில்லை.

இதில் 36 மாதங்களுக்கு தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 5 லட்சம் மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க முடியுமா.? தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்திற்கு நிதியை மாற்றி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது இரண்டு திட்டத்தையும் குழப்புகிறார்கள். தெளிவில்லாத புரிதல் இல்லாத தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட் ஆகத்தான் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு தமிழக அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக உண்மையை கூறியுள்ளது. மத்திய அரசைப் பொருத்தவரை எந்த ஒரு மாநிலத்திற்கும் மற்றும் யாருக்குமே நிலுவைத்தொகையை நிறுத்தவும், பாரபட்சமும் காட்ட மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடும் நிலையில் தமிழக பட்ஜெட்டில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

மத்திய அரசின் நிறைய திட்டத்திற்கு தமிழக அரசு புதிய பெயர் சூட்டி திட்டங்களை அறிவித்து வருகின்றனர். எத்தனை புதிய பெயர் சூட்டினாலும் அந்தத் திட்டம் தமிழக மக்கள் பயன் பெற வேண்டும். கடன்சுமையில் இருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் புதிதாக வருவாயை ஈட்ட வழி ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

தமிழக அரசின் இந்த பட்ஜெட் தாக்கல் என்பது பகல் கனவு காண்கின்ற பட்ஜெட் ஆகவே உள்ளது. தமிழக மக்களுக்கு சம்மந்தமில்லாத பொய்யை சொல்லி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட் நிதியமைச்சர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். பிஜிஆர் எனர்ஜிக்கு முதலில் ரெய்டு விட வேண்டும். முதலில் பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக திங்கள் கிழமை ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம்.

தொடர்ந்து பல்வேறு புகார்களை கொடுக்க உள்ளோம். கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கல் எறியக்கூடாது. தயவு செய்து ஊழல் செய்யும் உங்கள் அமைச்சர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டுங்கள். உங்கள் அமைச்சர் மீது உங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். இது மக்களுக்கான அரசு என்று நிரூபியுங்கள்.

ப.சிதம்பரம் என்ன அர்த்தத்தில் சொன்னார் எனத் தெரியவில்லை., நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர், துணை பிரதமர் ஆக ஏராளமானோர் கனவு காண்கின்றனர். தமிழக முதல்வரும், மம்தா, பினராயி விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஆகலாம் என்று கனவு காண்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை பிரதமர் பதவிக்கு போட்டி போடும் கூட்டம் அதிகமாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களை வைத்து மீண்டும் இந்தியாவில் பாஜக ஆட்சியை பிடிப்போம்.

விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் நாடாளுமன்றக் கூட்டத்தில் பள்ளி மாணவர்களைப் போல் ஆசிரியரிடம் புகார் அளிப்பதை நிறுத்திவிட்டு, தொகுதி மக்களுக்கு நல்லது செய்யட்டும். சொந்த தொகுதி மக்களை விட்டுவிட்டு வேறு ஒரு மாநிலத்தில் சென்று அரசியல் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். பிரதமருக்கு நிறைய வேலை உள்ளது. அவர் கூறியதை பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது, என்றார்.

Views: - 728

0

0