கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் கிடந்த திமுக பிரமுகரின் உடல் ; மதுரையில் நடந்த பயங்கரம்…!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 1:53 pm
Quick Share

மதுரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், திமுக பிரமுகரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரையூர் அருகே கூவலப்புரம்-காவட்டுநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணறு ஒன்றில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த வெங்கடாசலபதி மகன் பாலாஜி (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக பிரமுகரான பாலாஜி எல்.எல்.பி. பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு தர்ஷினி என்பவருடன் திருமணமாகி ஓராண்டுகள் ஆன நிலையில், 2 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. இதனால், மனைவி தர்ஷினி, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை. அதனால் அவரது பெற்றோர்கள் மனைவியை பார்க்க சென்று இருக்கலாம் என நினைத்து விட்டு அமைதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், எம். சுப்புலாபுரம் அருகே சிட்டுலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது விவசாய கிணற்றில், பாலாஜி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உடல் முழுவதும் சாக்கால் போர்த்தி இருந்ததால, அதனை அகற்றி பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருந்தது. திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 502

1

0