கட்சி நிர்வாகிகளுக்கு எழுந்த கோபம்.. தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம் ; அதிர வைக்கும் காரணம்…?

Author: Babu Lakshmanan
16 March 2024, 9:55 am
Quick Share

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என்று நடிகர் மன்சூர் அலிகான் மாற்றம் செய்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டு, தனியொரு ஆளாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். அதேவேளையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார்.

ஆனால், தேர்தலில் சீட் எல்லாம் கொடுக்க முடியாது என்றும், ஆதரவு மட்டும் தெரிவிக்கும்படி அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. இனிமேல் பொதுச்செயலாளர் தலைமையில் கட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி தொடர்பாக தன்னிச்சையாக செயல்பட்டதால் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாகவும், அவர் கட்சியின் தொண்டராக மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்தார்.

Views: - 182

0

0