மத்திய அரசின் PM SHRI பள்ளி திட்டத்தை கையில் எடுத்த தமிழக அரசு ; அண்ணாமலை வைத்த வேண்டுகோள்…!!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 11:15 am
Quick Share

தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான PM SHRI பள்ளி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துளளார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சமான PM SHRI பள்ளி திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டான 2024-25 ஆம் ஆண்டு தொடக்கத்தில் PM (SHRI) பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தால் கையெழுத்திடப்படும், என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், PM SHRI பள்ளி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துளளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு பாரதப் பிரதமர் பிரதமர் அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும். நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 185

0

0