குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : வேங்கைவயலில் நடப்பது என்ன? களத்தில் இறங்கிய சிபிசிஐடி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 12:04 pm
Pudukottai - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்த நீர் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற சாதியக் கொடுமை நடைபெற்று வருவதாகவும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மக்கள் குடி தண்ணீர் எடுக்கும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வேங்கை வயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜியசபா உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தண்ணீர் தொட்டியை இடிப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், புதிய தண்ணீர் தொட்டி அமைக்க தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 9 லட்சம் நிதி ஒதுக்கியுள்தாகவும், அதற்கு நிர்வாக அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், தற்போது உள்ள நீர் தேக்க தொட்டி இடிக்கும் பணியும் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இந்தநிலையில் 7-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையிலான போலீச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 552

0

0