திமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் : திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல்… அறிவாலயத்தில் சலசலப்பு..!

Author: Babu Lakshmanan
15 March 2023, 10:51 am
Quick Share

திருச்சி : திருச்சியில் திமுக எம்பி சிவா வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற திட்ட பணிகளையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் அவரது வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர்.

ஆகையால், அமைச்சரும், அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய போலீசார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட ஆதரவாளர்கள் 12 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் திமுக எம்.பி . வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திமுக கட்சியில் நீண்ட ஆண்டு காலமாக இருக்கும் அமைச்சர் கே. என். நேருக்கும், திருச்சி சிவாவிற்கும் ஏற்பட்ட மோதல் அக்கட்சியின் மத்தியில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி செஷன் நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, முத்து செல்வம், ராமதாஸ் மற்றும் திமுகாவினர் அங்கு சென்ற கைது செய்யப்பட்டவர்களை தாக்கு முயன்றனர். காவல்துறை உதவி ஆனையர்கள், கென்னடி, சுரேஷ்குமார், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதன் காரணமாக காவல் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 666

0

0