‘ஹலோ, நான் அமைச்சர் பேசுறேன்’… பணி நேரத்தில் டியூட்டியில் இல்லாத மருத்துவருக்கு சென்ற போன் கால்… அதிர்ந்து போன மருத்துவமனை!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 12:59 pm

அமைச்சரின் திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்று பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் திகைத்து போகினர். பின்னர், நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

அதன் பிறகு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அறையை பார்வையிட்டார். அப்போது, பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் பூபேஷ்குமார், மருத்துவமனையில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மருத்துவர் பூபேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். அதையடுத்து பணி நேரத்தில் பணியில் இல்லாததால் மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவரை பணியிடை நீக்கம் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியனின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!