தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அண்டை மாநிலங்கள்… தமிழ்நாட்டுல ஆங்கிலம் மட்டும்தான் ; ராமதாஸ் வேதனை..!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 5:07 pm

கடைகளில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை திறந்து தமிழை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமகவின் தமிழைத்தேடி இயக்கம் சார்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று தமிழகத்தின் பல இடங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று ராஜா அண்ணாமலைபுரம் 3வது குறுக்குத் தெருவில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மூன்று கடைகளின் தமிழ் பெயர் பலகைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள வணிக வளாகங்கள் திரைப்படங்களில் எங்குமே தமிழ் இல்லை/ சென்னை மாநகரமா லண்டன் மாநகரமா என்று அடிக்கடி சொல்ல வேண்டியது இருக்கிறது ஆங்காங்கே ஆங்கில பெயர் பலகைகள் தான் காணப்படுகிறது. திரைப்படங்களில் தமிழையே பார்க்க முடியவில்லை.

திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற அன்னை மொழியாம் தமிழ் மொழியை காப்பாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக தமிழை காப்பாற்ற முடியும். பிரதமர் உட்பட பலரும் தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி சொல்லி வருகின்றனர். ஆந்திரா, கேரளா கர்நாடகா மாநிலங்களில் அந்தந்த மொழியில் தான் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது தமிழ்நாட்டில் ஆங்கிலம் தான் இருக்கிறது.

திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும். தமிழை மறந்தால் வாழ முடியாது. வணிகர்கள் நினைத்தால் தமிழை வளர்க்க முடியும், தமிழை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது, எனக் கூறினார்.

  • a business man gave complaint o pandian stores 2 actress reehana முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?