நகராட்சி ஆணையரின் அடாவடி.. போராடிய கூட்டணி கட்சி கவுன்சிலர் கைது : திமுகவுக்கு ஜவாஹிருல்லா பகிரங்க எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 8:29 am
Jawahirullah
Quick Share

நகராட்சி ஆணையரின் அடவாடி.. போராடிய கூட்டணி கட்சி கவுன்சிலர் கைது : திமுகவுக்கு ஜவாஹிருல்லா பகிரங்க எச்சரிக்கை!

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலருமான யாக்கூப், கடந்த வாரம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு மாநகராட்சி ஆணையர் அழகு மீனா அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனாவின் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நேரடியாக நாமே களமிறங்குவோம் என முடிவெடுத்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தாம்பரம் யாக்கூப்புக்கு ஆதரவாக நேற்று மாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இந்த நிகழ்வு தாம்பரம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சி என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தாங்கள் முன் வைத்த புகார் மீது அமைச்சர் நேரு நடவடிக்கை எடுக்காதது திமுகவின் கூட்டணி கட்சியான மமக தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது. மமக நடத்திய போராட்டத்துக்கு விசிக ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், மனிதநேய மக்கள் கட்சித் தோழர்கள் மீது நடந்த இந்த கொலைவெறி தாக்குதல் தமிழக முதலமைச்சர் உத்தரவில் நடந்ததா ? அல்லது தமிழக போலீஸ் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கிறதா? எடப்பாடியாவது டிவி பார்த்து தெரிந்து கொண்டார். இன்றைய முதல்வர் டிவியும் பார்ப்பதில்லை என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் திமுகவில் கூட்டணி கட்சியாக இருக்கும் மமகவின் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில், தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை

தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணைபு பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனாவை கண்டித்து இன்று மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது.

அமைதியான முறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வஞ்சக நெஞ்சத்துடன் காவல் துணை ஆணையாளர் பவன்குமார் தலைமையில் மிக மோசமான தடியடியை நடத்தி இருக்கிறார்கள். இதில் பல ஆண்கள் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் தடியடிக்கு உட்பட்டுள்ளனர்.

அத்துமீறி நடந்து கொண்ட துணை ஆணையாளர் பவன் குமார் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தாம்பரம் ஆணையாளர் அழகு மீனா மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும்.

கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனும் கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் எமது தலைமை நிர்வாக குழு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Views: - 229

0

0