தரையில் அமர வைக்கப்பட்ட நரிக்குறவர் இன பெண்கள்… சமூக நீதி என்பது வெறும் பேச்சுக்கு மட்டும்தான்… அண்ணாமலை விளாசல்!!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 2:33 pm
Quick Share

சென்னை : மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் இருக்கை இருந்தும், நரிக்குறவர் சமுதாய பெண்களை தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நறிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொண்ட சில பிரச்சனைகளை தத்ரூபமாக எடுக்கப்பட்ட படம் ஜெய்பீம். இந்தப் படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதுடன், நரிக்குறவர் இன மக்களின் துயரங்கள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்படி, அண்மையில் நறிக்குறவர் சமுதாய மாணவி கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு உணவு உட்கொண்டார். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், திமுக ஆட்சியில் சமூக நீதி என்றும் நிலைநாட்டப்படும் என்று எல்லாம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புகழ் பாடி வந்தனர்.

மேலும், மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி எல்லாம் தமிழகத்தில் திமுக ஆட்சியில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு வருவதாக ஆளும்கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்தனர். அவ்வப்போது, நடக்கும் சில சம்பவங்கள், நிகழ்வுகளை வைத்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர், திமுக அரசின் சமூக நீதியை விமர்சனம் செய்தும், கேள்வியும் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்க வந்த நறிக்குறவர் சமுதாய பெண்களை, இருக்கை இருந்தும் தரையில் உட்கார வைத்த செயல், திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளதாக, வீடியோவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும், சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துவதாகக் குறிப்பிட்ட அவர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர்களின் நீண்ட கால கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்துச் செல்லும், என்று உறுதியளித்துள்ளார்.

அவரது இந்தப் பதிவைத் தொடர்ந்து, திமுக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர்.

Views: - 585

0

0