வேறுவழியில்லாமல் டிடிவி தினகரனுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்..? சொந்த ஊரில் பிள்ளையார் சுழி போட்ட ஆதரவாளர்..!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 6:25 pm
Quick Share

அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன், சசிகலாவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை தொட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அவர்கள் எடுத்த சட்டப்போராட்டம் எல்லாம் தோல்வியை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இறங்கியுள்ளனர்.

EPS Ops - Updatenews360

பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். இதனால், விரைவில் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடுவார்.

அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும், விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் அண்மையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கரை பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான முத்து என்பவர் வைத்த பேனரில், ஜெயலலிதா படத்துடன் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோர் புகைப்படங்களுடன் ஒற்றுமையே வலிமை, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கழகத் தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம். அஇஅதிமுக கழகத்தில் ஒற்றிணைவோம் இரட்டை இலையை வென்றெடுப்போம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 260

0

0