இந்தப் பேச்சு எல்லாம் இங்க வேணாம்… சுதந்திரம் வாங்கி 76 ஆண்டுகளாகியும் ஏன் நடக்கல ; அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்புமணி கேள்வி…!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 9:50 am
Quick Share

வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு கிடையாது என்றும், அதை நவீனபடுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆதங்கம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணி பல்வேறு இடங்களில் நடந்து வந்தாலும், தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணி பல்வேறு பகுதிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வருகை தந்த அவர், தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- தமிழக அரசு உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி, தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யவில்லை என்று கூறவில்லை, வேகம் போதுமானது கிடையாது. முதலமைச்சர் அவர்கள் நேற்று வந்து பார்வையிட்டார். ஆனால் முதலமைச்சர் அவர்கள் இங்கேயே இரண்டு நாட்கள் தங்கி அவர் தலைமையில் மீட்பு பணிகள் நிவாரண பணிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நிச்சயமாக அனைத்து கிராமங்கள், அனைத்து மக்களுக்கும் இந்த உதவிகள் சென்றடைந்திருக்கும்.

சில அமைச்சர்கள் இருக்கின்றார்கள். ஆனால் போதுமான வேகம் இல்லை. காலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று அங்கேயும் இதே பிரச்சனையை மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் அதைவிட மோசமான சூழல் உள்ளது. தூத்துக்குடி நகரத்தில் பல பகுதிகளில் மழை நீர் வடியவில்லை. பெரிய பெரிய ராட்சச பம்புகள் வைத்து நீரை வெளியேற்றி இருக்க வேண்டும். இன்று 6வது நாள், ஆனாலும் அதில் வேகம் பத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். 6 ஆயிரம் ரூபாய் ஒரு ரேஷன் கார்டு அறிவித்திருக்கிறார்கள். அது நிச்சயமாக போதுமானது கிடையாது, முதல் தவணை பத்தாயிரம் கொடுக்க வேண்டும். அடுத்தது பத்தாயிரம், அடுத்தது ஐந்தாயிரம் என 25 ஆயிரம் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு 17,000 ரூபாய் அறிவித்திருக்கிறார்கள். அது போதுமானது கிடையாது. ஒரு ஏக்கர் வாழை, நெல் பாதிப்பில் ஒரு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி உள்ளது. அவ்வளவு பெரிய வெள்ளம் இது, அவர்களுக்கெல்லாம் அரசு வீடு கட்டி கொடுக்க வேண்டும். உடனடியாக தேவைகள், இடைக்கால தேவைகள், நீண்ட கால தேவைகள் இதை அரசு செய்ய வேண்டும். இதுபோன்ற வெள்ளம் இனி வரும் காலத்தில் அடிக்கடி நாம் பார்க்கப் போகிறோம். இந்த அரசும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

ஆட்சியாளர்கள் அடுத்த தேர்தலில் எப்படி ஜெயிக்கலாம் என்ன பண்ணலாம் என்பது சிந்திப்பது இல்லை. எதிர்கால திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து எண்ணங்கள் இல்லை, என்றார்.

சென்னை வானிலை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடுவது குறித்து தாங்கள் கூறிய கருத்திற்கு நிர்மலா சீதாராமன் தற்போது நவீனப்படுத்திட்டோம் என தெரிவித்து இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுதான் ஒரு முக்கியமான பிரச்சனையா? தூத்துக்குடியில சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், கிராமத்திற்கு போகவில்லை என்பதெல்லாம் விட்டுவிட்டு நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டார்களாம். அதற்கு தான் விளக்கம் சொல்லிட்டேன். மீண்டும் விளக்கம் சொல்கிறேன்.

மாண்புமிகு நிர்மலா சீதாராமன் நாங்க நவீனப்படுத்திட்டோம் என்று சொல்கிறார்கள். என்னுடைய கேள்வி என்னுடைய ஆதங்கம் தமிழனா என்னுடைய ஆதங்கம், வெளிநாடுகளில் இப்படி துல்லியமாக இரண்டு நாட்களுக்குப் பிறகு 4 மணியிலிருந்து 5 மணி வரை இந்த பகுதியில் மழை பெய்யும் எனும் சொல்கிறார்கள். இங்கே ஏன் அந்த தொழில்நுட்பம் ஏன் கொண்டுவரப்படவில்லை. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் அந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டியதுதானே.

வரும் காலம் இதைவிட மோசமாக இருக்கும். இதைவிட பெரும் புயல், சூறாவளி வரும், கடுமையான வறட்சியும் வரும். அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நம்முடைய வானிலை அப்டேட் ஆக இருக்க வேண்டும். உலக தரம் வாய்ந்த வானிலை இங்கே இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் இங்கே மழை பெய்யும், இங்கே கன மழை பெய்யும், லேசான மழை பெய்யும் என்பதெல்லாம் வேண்டாம்.

சரியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் இவ்வளவு சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று சொல்லுங்கள். வெளிநாட்டில் சொல்வது ஏன் இங்கே சொல்ல முடியவில்லை..? என்ற ஆதங்கம் தான் எனக்கு. வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு கிடையாது. உலகத்தில் பல நாடுகளில் பார்த்து உள்ளேன். அந்த முன்னேற்றம் வர வேண்டும். இப்படி அறிவித்தார்கள் என்றால் உயிர் சேதம், உடமைகள் எல்லாம் நம் காப்பாற்றலாம். வருங்காலம் மிக சோதனையான மோசமான காலம் என்பதை நாம் பார்க்க போகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும், என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார். இவ்வளவு 6 நாள் கூட மழை நீர் வடியவில்லை என்றால் நீதி ஒதுக்கீடு செய்ததை என்ன செய்தார்கள்..? என்று கேள்வி எழுப்பினார்.

Views: - 284

0

0