மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி.. மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணம் : திமுகவை விமர்சித்த இபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 7:56 pm
EPS
Quick Share

மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி.. மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணம் : திமுகவை விமர்சித்த இபிஎஸ்!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஃபியூச்சர் கேமிங் என்ற சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து திமுக ரூ.509 கோடி பணம் வாங்கியிருப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.\

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு , வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 136

0

0