கனியாமூரில் பள்ளி மாணவி மர்ம மரணம்… பெருங்கொடுமை… நீதி விசாரணை தேவை : சீமான் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
15 July 2022, 8:51 pm
Stalin Seeman - Updatenews360
Quick Share

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிற செய்தியறிந்து பெரும் மனத்துயரமடைந்தேன். ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்தம் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் இதேபோன்று நிறைய மாணவிகள் அப்பள்ளியில் இறந்துபோயிருப்பதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. மாணவர்களின் எதிர்கால நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய கல்விக்கூடங்களே, அவர்களது உயிரைக் காவு வாங்குவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 461

0

0