அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு வழக்கு… சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை…!!

Author: Babu Lakshmanan
16 June 2023, 5:08 pm
Quick Share

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கூறியதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

அரசியல் தொடர்பான கருத்துக்களை பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் வெளிப்படையாகவே கூறி வருகிறார். குறிப்பாக, ஆளும் திமுக அரசு மீதான விமர்சனங்களையும் பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, சவுக்கு சங்கர் தன் மீது அவதூறான கருத்துக்களை கூறி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சவுக்கு சங்கர் தன் மீது இதுபோன்ற அவதூறு கருத்துக்களை கூறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சவுக்கு சங்கர் மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் தடை விதித்த பிறகும், உத்தரவை மீறி அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, இனி கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 338

0

0