அரசியல் சாசன விதியையே ஆளுநர் மீறிட்டாரு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு : நாளையே விசாரணை?!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 1:57 pm
ponmudi won
Quick Share

அரசியல் சாசன விதியையே ஆளுநர் மீறிட்டாரு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு : நாளையே விசாரணை?!!

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார்.

மேலும் சிறையில் சரணடையவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி பெற்றார். இதனை தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவு நகல் மற்றும் சட்டப்பேரவை அலுவலகத்தின் அறிக்கையை இணைத்து ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆளுநர் பொன்முடிக்கு தண்டனை மட்டுமே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை எனவே பொன்முடிக்கு அமைச்சருக்காக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறியிருந்தார்.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, MLA பதவிநீக்கம் செய்யப்படக் கூடாது என்பதற்காகவே உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநரின் செயல் ஐயத்திற்கிடமின்றி, நீதிமன்ற அவமதிப்பே ஆகும்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தத் தண்டனை சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்கதல்ல என திமுக வழக்கிறிஞர் வில்சன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஆளுநருக்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் மனு ஒன்றை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Views: - 167

0

0