ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த அங்கீகாரம்… மனதார வரவேற்கிறேன் ; திருமாவளவன் பேச்சு

Author: Babu Lakshmanan
20 April 2023, 7:34 pm
Quick Share

ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லிற்கு இன்று 20.04.23 வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- சமூக நீதிக் காவலர் வி பி சிங்க்கு தமிழகத்தில் திரு உருவ சிலை திறப்பது என்பது வரவேற்கத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆணவ படுகொலை சட்டம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறோம். சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல். திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது.

திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு. தேர்தல் களத்தில் மட்டும் அல்லாது சமூக நீதிக்கான களத்தில் தொடர்ந்து இணைந்து பயணிக்கக்கூடிய வலுவை பெற்று இருக்கக் கூடிய கூட்டணி ஆகும். அதனால் தொடர்ந்து நாங்கள் திமுக கூட்டணியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். கர்நாடகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

தேர்தல் ஆணையம் இபிஎஸுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்கு பிறகு சட்ட ரீதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக ஆளுநர் ஆர் என். ரவி, ஆர்எஸ்எஸ் தொண்டனாக இருந்து பணி செய்து வருகிறார். முழுக்க முழுக்க அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். ஜாதி அரசியல், மத அரசியல் , சனாதன அரசியலை ஆதரித்து பேசி வருகிறார். சமூக நீதி அரசியலுக்கு எதிராக பேசி வருகிறார்.

ஆளுநர் ரவி அவர்கள், அரசியல் பொறுப்பை உணர்ந்து, பதவி பொறுப்பை உணர்ந்து கடமை ஆற்ற வேண்டுமே தவிர அரசியல் பணிகள் செய்வது ஏற்புடையது அல்ல. இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை தமிழக முதல்வர் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும், என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 265

0

0