அண்ணாமலையால் முடியவே முடியாது… இன்னும் 6 மாசத்துக்கு அவர் பேச்சை கேட்டுதான் ஆகனும் ; திருமாவளவன்

Author: Babu Lakshmanan
11 November 2023, 12:16 pm
Quick Share

தமிழகத்தில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட கட்சியினர் வருவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாடு தொடர்பான இடத்தை தேர்வு செய்வதற்காக எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். அவரை திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ், வழக்கறிஞர் கலை, மற்றும் பல கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிக்கான பணியில் ஈடுபட்டார்.

முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல். திருமாவளவன் கூறியதாவது :- வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஜனநாயகம் வெல்லும் மாநாடு ஒருங்கிணைக்க உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, டி. ராஜா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக திமுக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

வேங்கைவயல் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிலர் ஒத்துழைக்க மறுப்பதாக கருத்து சொல்லப்பட்டுள்ளது. அது நடைபெற்று விரைந்து குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் ஆகிய கட்சிகள் பேரணி நடத்துகிறது. அவர்களால் கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா…? தமிழகத்தில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட கட்சியினர் வருவதில்லை. அதுதான் எதார்த்தமான உண்மை. அவர்கள் கூட்டணி கட்சியிடமும், சாதி அமைப்பினரும் ஆள் பிடிக்கிறார்கள்.

மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் என்று சொல்லுகிற கூற்றைப் போல் இது இருக்கிறது. அவரால் பெரியார் சிலை அகற்றவும் முடியாது, மணலை கயிறாக திரிக்கவும் முடியாது. இது பரபரப்புக்காக ஊடக கவனத்தில் இருப்பதற்கான பேச்சாகும். தமிழகத்தில் இதெல்லாம் எடுபடாது என தெரியும். நாடாளுமன்ற தேர்தல் வரை இவரது பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும். அதன் பிறகு யாரும் இருக்க மாட்டார்கள்.

பெரியார், அம்பேத்கர், மார்ஷ் ஆகிய தலைவர்களின் அடையாளங்களோடு தான் பாமக துவங்கியது. இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரியாரை விமர்சிக்கிற பொழுது அவர்கள் அமைதியாக இருந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மோடியை தமிழில் கொண்டு செல்வதற்கு முன்பாக உலகம் முழுவதும் தமிழ் போய்விட்டது. உலகப் புகழ்பெற்ற மொழி தமிழ் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள், எனக் கூறினார்.

பிக் பாஸ் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, பிக் பாஸ் நான் பார்ப்பதில்லை, என்றார்.

Views: - 218

0

0