அதிமுகவுடன் கைகோர்ப்பதில் எந்த தயக்கமும் இல்லை… காங்கிரஸ் கூடத்தான் சேரனும் என்று எல்லாம் கிடையாது : திருமாவளவன் பரபர பேச்சு..!

Author: Babu Lakshmanan
25 May 2023, 8:07 pm
Quick Share

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை புறக்கணித்ததை கண்டித்து விசிக தொண்டர்கள் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றவிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: மே 28ஆம் நாள் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அந்த திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என மொத்தம் 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப்படி அவர்தான் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தலைவர். அத்தகைய அதிகாரம் வாய்ந்த பொறுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் குடியரசு தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் புறக்கணித்துவிட்டு திறப்பு விழாவை நடத்துகிறார்கள்.

மக்களவை பேரவை தலைவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால் மாநிலங்களவை சபாநாயகராக இந்திய குடியரசு துணைத் தலைவரை புறக்கணித்துள்ளனர். அவரை அழைத்தால் குடியரசு தலைவரை ஏன் அழைக்கவில்லை என்கிற கேள்வி எழும் என்பதற்காகவே குடியரசு தலைவரையும் புறக்கணித்து இருக்கிறார்கள். இதை கண்டிக்கும் வகையில் விசிக கட்சி மே 28 துக்க நாளாக கடைபிடிப்பது என முடிவெடுத்துள்ளோம். அன்று விசிக தொண்டர்கள் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றவிருக்கிறோம்.

சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28ஆம் தேதி தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்காதவர், அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற கோட்பாடுகளுக்கு எதிரானவர். ஜெர்மனி சென்று ஹிட்லரின் நாசிக் கொள்கைகளை, முசோலினியின் பாசிச கொள்கைகளை இந்த நாட்டில் பின்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டவர். ஹிட்லரையே சந்தித்தார் என்றெல்லாம் வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. அவரை தங்களின் கொள்கை ஆசானாக ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சி தான் ஆர்எஸ்எஸ், பாஜக, எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

அனைத்து கட்சிகளும் மனநிலையை மாற்றிக் கொண்டு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரை ஏன் அழைக்கவில்லை, மே 28ஆம் தேதி தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி கூறினால் பரிசீலனை செய்யலாம். ஆனால் இது திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டது.

தெலுங்கானா தலைமைச் செயலகத்தை திறந்து வைத்த போது முதல்வர் மட்டுமே திறந்து வைத்தார் என்பதால் இதை பிரதமர் திறந்து வைப்பதில் புது நடவடிக்கை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:
சட்டமன்றம் வேறு, தலைமைச் செயலகம் வேறு, நாடாளுமன்றம் வேறு இதற்கான ஒப்பீடு தவறானது. ஒன்றிய அரசுக்காக தலைமை செயலகத்தை கட்டவில்லை, சட்டம் இயற்றும் மக்களவையை கட்டியிருக்கிறார்கள்.

செங்கோல் விவகாரத்தில் மதம் சார்ந்து வைக்க வில்லை என்பது குறித்த கேள்விக்கு: செங்கோல் மதச்சார்பு அடையாளங்களை கொண்டிருந்தால் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதில் நந்தி சிலை இருப்பதாக சொல்கிறார்கள். பிஜேபி மதச்சார்புள்ளவர்களாக பேசுகிறார்கள். அதனால் தான் அவர்களை எதிர்க்கிறோம். நாங்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் பக்கம் நின்று பேசுகிறோம், அவர்கள் எதிராக பேசுகிறார்கள்.

அமுல் பால் விவகாரத்தில் அமைச்சராக இருக்கும் முதல்வர் கடிதம் எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு: முதல்வரின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் குறித்த கேள்விக்கு: விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை மதுவிலக்கு தான் என்பது கோட்பாடு. திமுக தேர்தல் அறிக்கைகள் கூட மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். வருகிற ஜூன் இரண்டாம் வாரத்தில் முழுமையானது மதுவிலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மதுவிலக்கு தேசிய கொள்கையாகவே நடைமுறைப்படுத்த வேண்டும். சமகாலத்தில் மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

பிரேமலதா பேச்சு குறித்த கேள்விக்கு: திமுக தேர்தல் வாக்குறுதியில் மதுவிலக்கை சுட்டிக்காட்டி உள்ளது. அதை நினைவு படுத்த வேண்டியது எங்களின் கடமை. எனவே அந்த கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துவோம்.

மதுவிலக்கு அமல்படுத்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர முடியுமா என்ற கேள்விக்கு: கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், மாவட்டம் தோறும் உளவியல் தொடர்பான ஆலோசனை மையங்கள் நிறுவ வேண்டும். கிராமப்புறங்களிலும் போதை வஸ்துக்களை கட்டுப்படுத்த ஆய்வு செய்ய இந்த பழக்கங்களிலிருந்து மீள்வதற்கும் உரிய ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். கள்ள வணிகத்தில் ஈடுபடக்கூடிய மார்பியா கும்பல்களை கண்டறிந்து சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

கர்நாடக தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு: கட்டாயமாக பிரதிபலிக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உள்ளிட்ட சன்பரிவாக்கம் வரை ஆட்சி பீடத்தில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள். அதற்கு காங்கிரஸ் தலைமையில் எல்லோரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் தேவையற்றது. அப்படி நேர்ந்தால் அவ்வாறு ஒருங்கிணைந்தால் பெரிய வெற்றியை சாதிக்க முடியும். அப்படி இல்லை என்றாலும் கூட ஆங்காங்கே மாநில கட்சிகளை வெற்றி பெற வைக்க கூடிய விழிப்புணர்வு மக்களிடையே வளர்ந்திருக்கிறது. இந்து சமூகத்தினரே பாஜகவை புறக்கணிக்க கூடிய உளவியலுக்கு ஆர்ப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி என்பது இந்துக்களால் ஏற்பட்ட தோல்வி தான்.

மதுவிலக்கு போராட்டத்தில் அதிமுகவை வரவேற்கிறீர்களா என்ற கேள்விக்கு: மதுவிலக்கு கொள்கையில் அதிமுகவிற்கு உண்மையிலேயே ஈடுபாடு இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தச் சொல்லி அதிமுக போராட்டத்தை அறிவிக்குமா என்பது என்னுடைய கேள்வி. அப்படி அறிவித்தால் நிச்சயமாக அவர்களோடு சேர்ந்து போராடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தேர்தல் கூட்டணி என்பது வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்ட களம் என்பது வேறு, என்றார்.

Views: - 262

0

0