திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி தூக்கிட்டு தற்கொலை… உயர்கல்வி மாணவிகளிடையே தொடரும் சோகம்.. போலீசார் விசாரணை.!!

Author: Babu Lakshmanan
15 April 2022, 9:02 pm
Quick Share

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள என்ஐடி கல்லூரியில் பல்வேறு மாநில மற்றும் சர்வதேச அளவிலுமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியை சேர்ந்த அவளாசவுமியா தேவி (20) விடுதியில் தங்கி பி.டெக் சிவில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது அறையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தீட்சனா என்ற மாணவியும் உடன் இருந்து வருகிறார். நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்று விட்டார்.

அவளாசௌமியா தேவி மட்டுமே தனியாக விடுதி அறையில் இருந்துள்ளார். தீட்சனா நேற்று இரவு விடுதிக்கு திரும்பி வந்து அறையை பார்த்தபோது அறைகதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால் வேகமாக கதவை தள்ளிய போது கதவு திறந்தது. அப்போது மின் விசிறியில் அவளா செளமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில், இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து உடனடியாக விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் துவாக்குடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து உடலை பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவளா செளமியா தேவிக்கு ஐதராபாத்தில் படிக்கும் பொழுது ஒருவரை காதலித்து வருவதும், இந்த காதல் விவகாரம் இரு குடும்பத்திற்கும் தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து காதலன் நேற்று அவளாசௌமியா தேவியுடன் பேசி உள்ளார். எனவே காதல் பிரச்சனை தொடர்பாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அவளா சௌமியா தேவி காதல் தொடர்பான பிரச்சினைகள் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 967

0

0