விசாரணை கைதி மரணம் குறித்து கொலை வழக்காக மாற்றம்.. சிபிசிஐடி தீவிர விசாரணை.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

Author: Babu Lakshmanan
6 May 2022, 12:32 pm
Quick Share

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாக உறவினர்களும், எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், வலிப்பு ஏற்பட்டதாலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாகவும், கால் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இந்த வழக்கை திசைதிருப்ப பார்ப்பதாகக் கூறி, இது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட கசிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- உயிரிழந்த விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, திருப்பூரில் 65 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஈரோடு, திருப்பூர் சம்பவங்கள் ஒன்று போல இருப்பதால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், எனக் கூறினார்.

Views: - 624

0

0