விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்… சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
6 May 2022, 12:54 pm
Quick Share

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாக உறவினர்களும், எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், வலிப்பு ஏற்பட்டதாலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாகவும், கால் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இந்த வழக்கை திசைதிருப்ப பார்ப்பதாகக் கூறி, இது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞர் விக்னேஷின் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

பின்னர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- விசாரணை கைதி விக்னேஷ் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதலில் அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 13 இடங்களில் காயமும், கால் முறிவு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் இடம்பெற்றுள்ளது.

எனவே, விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால்தான் உண்மை வெளிப்படும், எனக் கூறினார்.

Views: - 579

0

0