தக்காளிக்கு பதில் ஆப்பிளே வாங்கிவிடலாம்.. மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் : இபிஎஸ் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 8:55 am
EPS - Updatenews360
Quick Share

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவடிக்காரனூரில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அதிமுகவின் கொடியேற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள், தேர்தல் வந்தால் சிறப்பாக பேசுவார்கள். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு என ஸ்டாலின் செயல்படுவதாக விமரசித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை.

கட்டுமான பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் கம்பி விலை விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு எட்டாக்கனியாகியுள்ளது.

அதிமுக கொண்டு வந்த ஒவ்வொன்று திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதே திமுக அரசின் சாதனை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது. நாளுக்கு நாள் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. விலைவாசியும் அதிகரித்துள்ளது.

தக்காளி விற்கும் விலைக்கு ஆப்பிள் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் இரண்டும் ஒரே விலைதான் விற்கிறது. எடை கணக்கில் தாக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களில் விலையை உயராமல் பார்த்துக்கொண்டதாகவும் கூறினார்.

விவைவாசி உயர்வால் மக்கள் படும் துயரங்கள் வேதனைகள் பற்றி முதல்வருக்கு கவலை இல்லையெனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

Views: - 295

0

0