உயிர்களை பறித்த பேனர்… நடிகர் சூர்யா பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம் : முடிவுக்கு வருமா பேனர் கலாச்சாரம்?!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 8:13 pm
Surya fans - Udatenews360
Quick Share

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள சூர்யாவிற்கு தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு சினிமா உலகிலும் தனி மார்க்கெட் உண்டு. சூர்யாவுக்கு இன்று 48-வது பிறந்த நாளாகும். சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வீடியோ அமைந்துள்ளது. சூர்யாவின் பிறந்த நாளை இன்று காலை முதலே அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களையும் அவரது ரசிகர்கள் செய்து வருகிறார்கள். அதுமட்டும் இன்றி சூர்யாவின் ரசிகர்கள் பேனர்கள் கட்டியும், போஸ்டர்கள் ஒட்டியும் கோலாகலமாக கொண்டாடுவதை பார்க்க முடிந்தது.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை மண்டலத்தில் யாக்களவாரி பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சூர்யாவின் பிறந்த நாளை அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டனர்.

அதன்படி, சூர்யாவின் பிறந்த நாளில் பிரம்மாண்ட பேனர் வைத்து அசத்தி விட வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்காக கட் அவுட்களை ரெடி செய்து விட்டு இன்று அதிகாலை கட் அவுட்களை கட்ட ஆரம்பித்தனர்.

அப்போது கட் அவுட்டிற்கு பின்னால் இருந்த கம்பி மேலே சென்ற மின்சார வயரில் உரசியது. இதன் காரணமாக நொடிப்பொழுதில் கட் அவுட்டில் மின்சாரம் பாய்ந்தது.

இதில், தூக்கி வீசப்பட்ட சூர்யா ரசிகர்களான வெங்கடேஷ் (வயது 19), சாய் (வயது 20) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். சூர்யா பிறந்த நாளுக்கு பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 297

0

0