அரசு நினைத்தால் ஒரு வாரம்போதும்… வன்னியர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்… முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ்…!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 2:29 pm
Quick Share

வன்னியர் இட ஒதுக்கீட்டில் புள்ளி விவரத்துடன் மீண்டு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி , உள்ளிட்ட பாமக குழுவினர் 7 பேர் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :- உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை எல்லாம் முதல்வரிடம் சொல்லி அடுத்த கட்டமாக எங்கள் கோரிக்கை என்ன என்பதை விளக்கமாக சொல்லும் வகையில் முதல்வரை சந்தித்தோம். முதல்வருடன் நடந்த சந்திப்பு நல்ல சந்திப்பாக அமைந்தது. மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. உள் ஒதுக்கீடு கொடுக்கலாம். சாதகமான அம்சங்களை கூறியுள்ளது என்பதையும் முதல்வரிடம் விளக்கமாக சென்னோம். வன்னியர் இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் தான் சிக்கலாக இருப்பதால், புள்ளி விவரம் இருக்கிறது. அதனை சேகரித்து சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழக அரசு நீதிமன்றத்தில் தரமான வழக்கறிஞர்களை வைத்து தான் வாதாடியது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு எல்லாம் இருக்கிறது. ஆனால் வன்னியர்களுக்கு இல்லை.வன்னியர் இட ஒதுக்கீடு யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடு கிடையாது.

திமுக – அதிமுக மேல் வைத்த குற்றச்சாட்டுகள் உள்ளே நாங்கள் போக விரும்பவில்லை. இது சமூக நீதி பிரச்சனை. இருக்கிற புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். அரசு நினைத்தால் ஒரு வாரம் காலத்தில் இந்த புள்ளிவிவரங்களை சேர்க்க முடியும்.

மூத்த வழக்கறிஞர்களை கொண்டு அரசு நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் வாதாடியது. நல்ல வகையில் இந்த அரசு சட்ட பிரச்சனையை கையாண்டது, என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது :- பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதத்தை முதலமைச்சரிடம் கொடுத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்று அதிமுக 10.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அதை திமுக உறுதி செய்தது. இதில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 882

0

0