தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலி : சாலையில் கயிறு கட்டி கொளுத்தும் வெயிலில் மீனவர்கள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 5:33 pm

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சீர்குலைந்து கிடக்கும் துறைமுக முகத்துவாரத்தை மறுசீரமைப்பு பணியை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூத்துறை மீனவ கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அரங்கேறி வந்தன. இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, கடந்த ஆட்சி காலத்தின் இறுதியில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தும் இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது. இதனால், கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (48) என்ற மீனவர் பலியானார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் நிலையில் இறந்த மீனவரின் மனைவி மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து மீனவரின் இறப்பிற்குப் உரிய நிவாரணம் அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சீரமைக்கப்படாமல் கிடக்கும் துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக வேலை துவங்கி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூத்துறை சந்திப்பு பகுதியில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து இணைப்பு சாலைகளில் கயிறுகள் கட்டி தடுப்பு அமைத்து கொளுத்தும் வெயிலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

பதற்றம் நீடிக்கும் என்பதால் குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வருவாய்த்துறையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் போராட்டக்காரர்கள் அதிகாரிகளின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்