லிங்கா பட தோல்விக்கு ரஜினிதான் காரணம்… வெளிப்படையாகவே சொன்ன இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 5:58 pm
Quick Share

‘லிங்கா’ படத்தின் தோல்விக்கு நடிகர் ரஜினிகாந்த் தான் காரணம் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

1990ல் வெளியான புரியாத புதிர் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் கேஎஸ் ரவிக்குமார். இதைத் தொடர்ந்து, சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அதேபோல, நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்தும் பல படங்களை எடுத்துள்ளார். குறிப்பாக, கமல், ரஜினியை வைத்து இவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்தது. ரஜினியை வைத்து எடுக்கப்பட்ட படையப்பா, முத்து உள்ளிட்ட படங்கள் வெற்றியை கொடுத்திருந்தாலும், லிங்கா படம் மோசமான தோல்வியை தழுவியது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் அனுஷ்கா ரெட்டி, சோனாக்ஷி சின்கா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராக்லைன் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. குறிப்பாக, இந்தப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், ‘லிங்கா’ படம் தோல்வி குறித்து கே.எஸ். ரவிக்குமார் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், ‘லிங்கா’ படத்திற்கு முதலில் வேறு ஒரு கிளைமாக்ஸை எழுதி வைத்திருந்ததாகவும், ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடிட் ஆன சீன்களை ரஜினி பார்த்து இருப்பதாகவும் கூறிய அவர், அதன் பின் கிளைமாக்ஸை மாற்ற சொன்னதாக கூறியுள்ளார்.

ரஜினி சொன்னபின் பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் பலூன் சீனை எடுக்க வேண்டியதாகிவிட்டதாகவும் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதனால், லிங்கா படுதோல்விக்கு ரஜினி எடுத்த முடிவு தான் காரணம் என இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 637

3

1