லியோ FDFS ரத்து! ரோகிணி தியேட்டரில் போலீசார் குவிப்பு – கடும் கட்டுப்பாடுகளுக்கு காரணம் என்ன?

Author: Shree
19 October 2023, 10:20 am
leo
Quick Share

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று 19ஆம் தேதிக்கு திரைக்கு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது.

டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை அடுத்தடுத்து தமிழக அரசு நிராகரித்தது.

இதனால், இன்று முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ள லியோ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனர்.

விஜய் , அஜித் , ரஜினி போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளிவரும் நேரத்தில் சென்னையில் பிரபலமான திரையங்குகள் விழா கோலம் போல காட்சியளிக்கும். ஆனால் ரோகிணி தியேட்டர் களையிழந்து காணப்படுகிறது. அந்த தியேட்டரை ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தியதால் விஜய் ரசிகர்களை உள்ளே நுழைய விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு லியோ படத்தின் FDFS ரத்து செய்துள்ளனர்.

அதற்கு பதிலாக முதல் காட்சியை காலை 11.30 மணிக்கு திரையிட உள்ளதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதனால் ரோகிணி திரையரங்கம் களையிழந்து காணப்படுகிறது.

Views: - 249

0

0