ஒரே ஒரு கப் கடலைப்பருப்பு இருந்தால் ருசியான பாயாசம் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
9 September 2022, 7:33 pm
Quick Share

பாயாசம் என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் பாயாசம் சேமியா பாயாசம் தான். ஆனால் கடலைப்பருப்பு வைத்து கூட பாயாசம் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா…??? ஒரே ஒரு கப் கடலைப்பருப்பு இருந்தால் போதும்.. அசத்தலான சுவையில் அனைவரும் விரும்பும் பாயாசம் செய்து விடலாம். இப்போது இந்த கடலைப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – ஒரு கப் நெய் – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்
ஜவ்வரிசி – 2 தேக்கரண்டி
வெல்லம் – 100 கிராம்
தேங்காய் பால் – 2 கப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் – 1/2 கைப்பிடி
முந்திரி பருப்பு – 10
உலர் திராட்சை – 10

செய்முறை:
*பாயாசம் செய்வதற்கு முதலில் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து கொள்ளவும். முதல் பால், இரண்டாவது பால் என தனித்தனியாக இரண்டு கப்பில் வையுங்கள்.

*இப்போது ஒரு குக்கரில் சிறிதளவு நெய் விட்டு கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

*பருப்பு வறுப்பட்டதும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, ஜவ்வரிசி சேர்த்து 5 விசில் வரவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் 100 கிராம் துருவிய வெல்லுத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு எடுக்கவும்.

*இதனை வேக வைத்த பருப்புடன் சேர்த்து கிளறுங்கள்.

*இப்போது இரண்டாவது தேங்காய் பால் ஒரு கப் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

*தேங்காய் பாலுடன் பருப்பு நன்றாக கலந்து பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.

*முதல் பால் திரிந்து போக வாய்ப்பு உள்ளதால் அடுப்பை அணைத்த பிறகு தான் அதனை சேர்க்க வேண்டும்.

*கடைசியில் ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் ஊற்றினால் அருமையான பாயாசம் இப்போது தயார்.

Views: - 615

0

0