அரசியல் மாண்பு இல்லாமல் இப்படியா பேசுவது… உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்..!!
Author: Babu Lakshmanan18 பிப்ரவரி 2022, 1:15 மணி
சென்னை : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து கடுமையாக தாக்கிப் பேசிய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, கோவை மக்களை நம்பமாட்டேன் என்றும், கடந்த முறை உற்சாக வரவேற்பு அளித்தும் வாக்காளிக்காமல் போனீர்கள்… இந்த முறை மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கோவை மாவட்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக பொறுப்பாளருமான எஸ்பி வேலுமணியை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார். ஊழல்மணிக்கு சாவுமணி அடிப்பது நிச்சயம் என்று அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சு அதிமுகவினரிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் எனக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் அவர் பேசியதாவது :- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பூத் கைப்பற்றுதல், கலவரத்தை உண்டு பண்ணுவதற்காக திமுகவினர் கொடூர ரவுடிகளை இறக்கி இருக்கின்றனர். உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது தனது மாண்பை மீறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு இனி சாவுமணி எனத் தகாத சொல்லால் பேசுகிறார். அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.
0
0