அடேங்கப்பா.. 200 டன் கஞ்சா : மலைபோல குவித்து தீ வைத்து கொளுத்திய காவல்துறையினர்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 4:41 pm
Ganja Fire - Updatenews360
Quick Share

விசாகப்பட்டினம் அருகே ஒரே இடத்தில் 200 டன் கஞ்சா தீ வைத்து எரித்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான அளவில் கஞ்சா தோட்டங்கள் உள்ளன. அங்கிருந்து நாடு முழுவதும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.

எனவே கஞ்சா பயிர் செய்வது, கடத்துவது ஆகியவற்றை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு மாநிலங்களும் ஆந்திர அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனால் ஆந்திர மாநில அரசு விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி வாகன தணிக்கை மேற்கொண்டு கஞ்சா கடத்தலை தடுத்து நிறுத்தி வருகிறது.

இந்த நிலையில் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 385 கிலோ கஞ்சா மற்றும் 133 கிலோ ஹாசிஸ் ஆயில் ஆகியவற்றை போலீசார் இன்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அளித்தனர்.

தீ வைத்து எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாயாகும். விசாகப்பட்டினம் பகுதியில் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்களை போலீசார் இதுவரை அளித்துள்ளனர்.

இன்னும் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டங்கள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

Views: - 338

0

0